1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

2 இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோல் வீதம் அவர்கள் தலைவர்களிடம் தங்கள் மூதாதையர் குலங்களுக்கேற்பப் பன்னிரண்டு கோல்களைப் பெற்றுக் கொள்; ஒவ்வொருவன் பெயரையும் அவன் கோலின் மேல் எழுது;

3 ஆரோன் பெயரை லேவியின் கோலின் மேல் எழுது; இவ்வாறு ஒவ்வொரு மூதாதையர் குலத் தலைவனுக்கும் ஒரு கோல் இருக்கும்.

4 பின் அவற்றைச் சந்திப்புக் கூடாரத்தில் நான் உன்னைச் சந்திக்கும் உடன்படிக்கைப்பேழை முன் வைப்பாய்.

5 நான் தெரிந்து கொள்பவரின் கோல் துளிர்க்கும். இங்ஙனம், உங்களுக்கெதிராக முறுமுறுக்கிற இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புக்களை என் முன்னின்று ஒழித்து விடுவேன்.⒫

6 மோசே இஸ்ரயேல் மக்களிடம் பேசினார்; ஒரு தலைவனுக்கு ஒன்று வீதம் அவர்கள் மூதாதையர் குலங்களுக்கேற்பப் பன்னிரு கோல்களை அவர்கள் தலைவர்கள் அவரிடம் கொடுத்தனர்; அவர்கள் கோல்களுள் ஆரோன் கோலும் இருந்தது.

7 மோசே அந்தக் கோல்களை உடன்படிக்கைக் கூடாரத்தினுள் ஆண்டவர் திருமுன் வைத்தார்.⒫

8 மறுநாள் மோசே உடன்படிக்கைக் கூடாரத்தினுள் சென்றார்; லேவிகுலத்துக்காக இருந்த ஆரோனின் கோல் துளிர் விட்டிருந்தது; அது துளிர்த்துப் பூத்து வாதுமைப் பழங்களைத் தாங்கியிருந்தது.

9 பின்னர், மோசே ஆண்டவர் முன்னின்று எல்லாக் கோல்களையும் எடுத்து வெளியே இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கொண்டு வந்தார்; அவர்கள் பார்த்தார்கள்; ஒவ்வொரு தலைவனும் தன் கோலை எடுத்துக் கொண்டான்.

10 ஆண்டவர் மோசேயிடம், “ஆரோன் கோலைத் திரும்ப எடுத்து உடன்படிக்கைப் பேழை முன் வை; எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோர் சாகாதபடி அவர்கள் முறுமுறுப்புகளை என் முன்னின்று நீ ஒழித்துவிட்டதற்கு ஓர் அடையாளமாக அது வைக்கப்படட்டும்” என்றார்.

11 அப்படியே மோசே செய்தார்; ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்.⒫

12 இஸ்ரயேல் மக்கள் மோசேயிடம், “இதோ நாங்கள் மடிந்தோம், நாங்கள் அழிந்தோம், அனைவரும் அழிந்தே போனோம்;

13 நெருங்கி வருகிற எவனும், அதாவது ஆண்டவரின் திருஉறைவிடத்தை நெருங்கி வருகிற எவனும் செத்தே போவான்; நாங்கள் அனைவரும் சாகத்தான் வேண்டுமா?” என்றனர்.

எண்ணாகமம் 17 ERV IRV TRV