1 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ உன் தாயைத் தள்ளி␢ வைத்ததற்கான மணமுறிவுச் சீட்டு எங்கே?␢ உங்களை விற்றுவிடும் அளவுக்கு␢ எவனுக்கு நான் கடன்பட்டிருந்தேன்?␢ இதோ, உங்கள் தீச்செயல்களை␢ முன்னிட்டே நீங்கள் விற்கப்பட்டீர்கள்;␢ உங்கள் வன்செயல்களின் பொருட்டே␢ உங்கள் தாய் தள்ளி வைக்கப்பட்டாள்.⁾

2 ⁽நான் வந்தபோது ஒருவனும்␢ இல்லாமற் போனதேன்?␢ நான் அழைத்தபோது பதில் தர␢ எவனும் இல்லாததேன்?␢ உங்களை மீட்க இயலாதவாறு␢ என்கை சிறுத்துவிட்டதோ?␢ விடுவிக்கக் கூடாதவாறு␢ என் ஆற்றல் குன்றிவிட்டதோ?␢ இதோ என் கடிந்துரையால்␢ கடல்தனை வற்றச் செய்கிறேன்;␢ ஆறுகளைப் பாலையாக்குகிறேன்;␢ அவற்றின் மீன்கள் நீரின்றி நாறுகின்றன;␢ தாகத்தால் சாகின்றன.⁾

3 ⁽வான்வெளியைக் காரிருளால்␢ உடுத்துவிக்கின்றேன்;␢ அதனைச் சாக்கு உடையால்␢ போர்த்துகின்றேன்.⁾

4 ⁽நலிந்தவனை நல்வாக்கால்␢ ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட,␢ ஆண்டவராகிய என் தலைவர்,␢ கற்றோனின் நாவை␢ எனக்கு அளித்துள்ளார்;␢ காலைதோறும் அவர் என்னைத்␢ தட்டி எழுப்புகின்றார்;␢ கற்போர் கேட்பது போல்␢ நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.⁾

5 ⁽ஆண்டவராகிய என் தலைவர்␢ என் செவியைத் திறந்துள்ளார்;␢ நான் கிளர்ந்தெழவில்லை;␢ விலகிச் செல்லவுமில்லை.⁾

6 ⁽அடிப்போர்க்கு என் முதுகையும்,␢ தாடியைப் பிடுங்குவோர்க்கு␢ என் தாடையையும் ஒப்புவித்தேன்.␢ நிந்தனை செய்வோர்க்கும்␢ காறி உமிழ்வோர்க்கும்␢ என் முகத்தை மறைக்கவில்லை.⁾

7 ⁽ஆண்டவராகிய என் தலைவர்␢ துணை நிற்கின்றார்;␢ நான் அவமானம் அடையேன்;␢ என் முகத்தைக் கற்பாறை␢ ஆக்கிக் கொண்டேன்;␢ இழிநிலையை நான் அடைவதில்லை␢ என்றறிவேன்.⁾

8 ⁽நான் குற்றமற்றவன் என எனக்குத்␢ தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்;␢ என்னோடு வழக்காடுபவன் எவன்?␢ நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்;␢ என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்?␢ அவன் என்னை நெருங்கட்டும்.⁾

9 ⁽இதோ, ஆண்டவராகிய என் தலைவர்␢ எனக்குத் துணைநிற்கின்றார்;␢ நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட␢ யாரால் இயலும்?␢ அவர்கள் அனைவரும் துணியைப் போல்␢ இற்றுப்போவார்கள்;␢ புழுக்கள் அவர்களை அரித்துவிடும்.⁾

10 ⁽உங்களுள் ஆண்டவருக்கு அஞ்சி நடந்து␢ அவர்தம் அடியானின் சொல்லுக்குச்␢ செவிசாய்ப்பவன் எவன்?␢ அவன் ஒளிபெற இயலா நிலையில்␢ இருளில் நடந்துவருபவன்;␢ ஆண்டவரின் பெயர்மீது␢ நம்பிக்கை கொண்டு␢ தன்கடவுளைச் சார்ந்து கொள்பவன்.⁾

11 ⁽ஆனால், நெருப்பு மூட்டித்␢ தீப்பிழம்புகளால் சூழப்பட்டவர்களே;␢ நீங்கள் அனைவரும்␢ உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும்,␢ நீங்கள் மூட்டிய␢ தீப்பிழம்புகளிடையேயும் நடங்கள்;␢ என் கையினின்று␢ உங்களுக்குக் கிடைப்பது இதுவே:␢ நீங்கள் வேதனையின் நடுவே␢ உழன்று கிடப்பீர்கள்.⁾

ஏசாயா 50 ERV IRV TRV